ஜனாதிபதி தேர்தல் நோய் படுவேகமாக பரவிவரும் இவ் வேளையில், பெரும்பான்மையான தமிழ் மக்கள் ஆட்சி மாற்றத்தையே விரும்புவதாக கூறிவருகின்றனர்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு எடுத்த முடிவை அடுத்து மக்கள் இம்முடிவை எடுத்துள்ளனர் என்று தவறாக புரிந்து கொள்ள வேண்டாம், த.தே.கூட்டமைப்பு முடிவெடுப்பதற்கு முன்னரே மக்கள் இந்த முடிவையே மனதில் கொண்டிருந்தனர் என்பதை பலரின் கருத்துக்கள் மூலமும் அறிய முடிந்தது.
த.தே.கூ அமைப்பு தனது தீர்மானத்தை அறிவிப்பதற்கு நீண்ட நாடகத்தை ஆடியது தான் அநேகரின் விமர்சனத்திற்கு உள்ளானது.
அது மாத்திரமின்றி 2005 தேர்தலில் புலிகள்விட்ட தவறுதான் இன்றைய நிலைக்கு காரணம் என்று கூறியது மேலும் சிக்கலாகியது. (தேர்தலை புறக்கணிக்க சொல்வதற்கும் யுத்தம் தொடங்குவதற்கும் என்ன தொடர்பு? இன்றைய நிலைக்கு வேறு காரணங்கள் உண்டு.)
ஜனாதிபதி தேர்தல் அறிவிப்பு தொடர்பான கிசுகிசுப்புக்களின் ஆரம்பத்திலேயே கொழும்பு ஊடகங்கள் வட்டாரத்தில் த.தே.கூ. சரத் பொன்சேகாவை ஆதரிக்கும் நிலையிலேயே உள்ளது என்று நம்பப்பட்டது.
யார் தான் ஜனாதிபதியாக வந்தாலும் தமிழர்களை பொறுத்தவரை ‘பழைய குருடி” கதையாகத்தான் இருக்கும்.
தடுப்பு முகாமில் இருந்தோர், தற்காலிக முகாமில் இருந்தோர், சிகிச்சை பெற்று வந்தோர் ஆகியோர்களை விடுதலை செய்வதும் ஒரு நாடகம், மேற்குறிக்கப்பட்டோர் விடுமுறை என்ற அடிப்படையிலேயே வீடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இவர்களின் பின்னால் புலனாய்வு பிரிவினரும், அதன் வால்களும் சுற்றித் திரிகின்றனர் என்பது பாதிக்கப்ட்டுக் கொண்டிருப்போருக்கே தெரியும்.
சிங்களவர்கள் பொருளாதார சுமைகள் நிமித்தம் ஆட்சி மாற்றத்தை வரவேற்கின்றனர், தமிழர்கள் அச்சுறுத்தல்கள் நீங்கும் என்ற நப்பாசையில் ஆட்சி மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர்.
ஆனால் தமிழருக்கு நடக்க இருப்பது விபரீதம்.
என்ன தான் இருந்தாலும் ‘இராணுவத்தை காப்பாற்றுவேம்” என கூறும் இருவரும் என்ன செய்வார்கள்?
(இந்த செய்தியை படிக்கவும்) மக்கள் தமது சொத்துக்கள் சூறையாடப்படுவதை ஆதாராத்துடன் கூறுவதை இராணுவம் ஆதாரமற்ற குற்றச் சாட்டு என்று கூறுகின்றது, மன ஆறுதலுக்கு என்றாலும் அப்படி நடந்திருந்தால் அது பற்றி விசாரிக்கின்றோம் என்று கூறமுடியாத சூழ்நிலை உள்ளது, என்றால் தமிழருக்கான உரிமை எந்தளவு இருக்கின்றது?
இரு பிரதான வேட்பாளர்களும் காப்பாற்ற இருக்கும் இராணுவத்தின் அடாவடித்தனம் இது.
ஆகவே த.தே.கூ ஆதரவு அளிக்கும் நிலை புதிய அத்தியாயமாக இருப்பதிலும் பார்க்க வரலாற்று துரோகமானது என்பது தான் அதிகம்.
பல இராணுவ அதிகாரிகள் குடிசார் பதவிகளில் இருக்கிறார்கள் என தமது பலத்த கண்டணங்களை தெரிவித்த த.தே.கூ. இன்று இராணுவத் தளபதிக்கே ஆதரவு அளிக்கின்றது.
இதற்கிடையே கொலைகளுடன் அபிவிருத்தியடைந்த தேர்தல் பிரசாரங்கள் கோடிட்டு காட்டுவது என்ன?
தமிழ் மக்கள் இன்றளவும் தமது ஜனநாயக விருப்பத்தை வெளிப்படையாக தெரிவிக்க முடியாத அச்சுறுத்தலுடன் உள்ளனர். (97வீதமான தமிழ் மக்கள்(+முஸ்லிம்) அமைதியான தீர்வையே எதிர்பார்த்துள்ளனர், அனால் மீதி வீதமான கட்சி சார்ந்தோரின் கருத்துக்கள் தான் அதிகளவில் உள்ளது)
இது இவ்வாறிருக்க
புலம்பெயர் தமிழர்களின் செயற்பாடுகள் வேறு திசையில் செல்கின்றது, ‘வட்டுக் கோட்டை தீர்மானத்தின் மீதான வாக்கு கணிப்பு” என்ற அடிப்படையில் நாடுகடந்த தமிழீழம் அமையும் என்ற நிலைப்பாடு உள்ளது.
இதற்கு விமர்சனங்கள் முன்வைக்கப்டுகின்றன, ஆனால் அவ்விமர்சனங்கள் வளர்ச்சிப்பாதையை நோக்காதவைகளாக உள்ளதால், புலம்பெயர் செயற்பாடுகள் சுக்குநூறாகியது போன்ற தோற்றப்பட்டை வெளிப்படையாக காட்டிநிற்கின்றது.
கட்டாக்காலிகளாக மின்னியல் ஊடகங்கள் மூலம் இலகுவில் பரப்பப்படும் கருத்துக்கள் புலம்பெயர் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பல புலி செயற்பாட்டாளர்கள் இவ்விடயங்களில் ஒதுங்கியிருப்பதாக கூறிவருகின்றனர்.
இவர்கள் ஒதுங்கியிருப்பது எவற்றில்? விடுதலைப் புலிகள் பயங்கரவாத அமைப்பு என சர்வதேசம் கூறியதை தற்போது ஏற்றுக் கொள்கின்றார்கள் என அர்த்தம் கொள்ளும் விதமாகவே இவ் ஒதுங்கல்கள் நோக்கப்படும்.
அதாவது போராட்டம் தோற்கடிக்கப்பட்டு இன்று தமிழ் மக்கள் நிர்க்கதியாகியதன் பின்னர் தாம் ஒதுங்கியுள்ளனர் என்று கூறுவது எந்தவகையில் ஏற்புடையதாகும்?
மேலும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருக்கின்றார் என விவாதிப்பது அவசியமா?
‘தான் விரும்பாத ஒருவரின் கரங்கள் தன் உடம்பில் ஊருவது போன்ற அருவருப்பு உணர்வுடன் உள்ள ஒரு மங்கையின் நிர்க்கதியான நிலைபோன்று, இன்று தமிழர் நிலங்களில் இராணுவம் நிலைநிற்கின்றது”
இப்படியான சூழ்நிலையில் தமிழர்கள் யாவற்றையும் இழந்து நிற்கையில் தலைவர் உயிரோடுருக்கின்றார் என்ற விவாதம் நமக்கெதற்கு?
தீக்குச்சி உரசினால் தான் பற்றியெரிந்து தான் பொருளை பற்றவைக்கும், அது போன்று தான் ஒரு புரட்சித் தலைவன் இருக்க வேண்டும்.இருந்தார்கள்.
ஆகவே தலைவர் பிரபாகரன் தமிழீழ தீயை பற்ற வைத்த தீக்குச்சியா? அல்லது தப்பிச் சென்ற சுயநலவாதியா?
கணவனின் இழப்பையே நம்பமறுக்கும் மனைவி, மகனின் இழப்பை நம்பும் தாயாவாளோ? அது தான் தாய் பாசம். இதை புரியாமால் பாசத்தையும் அரசியலாக்கலாமா?
வேண்டாத தர்க்கங்களை புரியுமுன்னர் இவர்கள் பிஞ்சுகளின் இரத்தக் குளியலை நினைப்பதும் இல்லை.
இன்று புலம் பெயர் சமூகத்துக்குள் இருக்கும் இக் குழப்பத்தை பயன்படுத்துவதற்கு ஸ்ரீலங்கா தவறவில்லை.வேண்டாம்!வேண்டாம்!! மீண்டும் ஒரு போராட்டம் வேண்டாம்!!! என்ற பகுதியில் குறிப்பிட்டிருந்தேன்.
எனவே தற்போது தேர்தலை அண்மித்து தாக்குதல் நடத்த புலிகள் திட்டமிட்டுள்ளனர், என புதிய நம்பிக்கைகளை உருவாக்குகின்றனர்.
ஆனால் இறுதிக்கட்ட யுத்தத்தை அனுபவித்த பெரும்பாலான மக்கள் புலிகளை அடியோடு மறுக்கின்றனர் அதே வேளை வடக்கு-கிழக்கு மக்களும் இனி ஒரு போராட்டத்தை விரும்பவில்லை.
இந் நிலையில் போராளிகள் யார்? மீண்டும் ஒரு போர் என்ற வதந்தி நிஜமடைவதை தமிழ் மக்கள் விரும்பவில்லை. ஆனால் தமிழ் மக்களை பகடக்காயாக பயன்படுத்தி புதிய ஆட்சி மாற்றத்தின் பின் இயல்பு வாழ்ககையை குழப்பும் முயற்சிகள் இடம் பெறுகின்றது என்று நம்பப்படுகின்றது.
தற்போது விடுப்பில் உள்ள முன்னாள் புலி உறுப்பினர்களும் இனம் தெரியாத நபர்களின் வன்முறைகளுக்கு உள்ளாகலாம் எனவும் அஞ்சப்படுகின்றது.
இவை எல்லாவற்றுக்கம் காரணம் புலம் பெயர் சமூகத்தில் ‘கடமை உணர்வுடன் செயலாற்ற முடியாதுள்ள தமிழர்களே”
இன்னும் புலிகளுடன் தொடர்புள்ளவர்கள் என மாறி மாறி தங்களுக்குள் சேறு பூசிக் கொள்வதற்கும் தமிழர்கள் தான் இடம்கொடுத்தவர்களாக அவர்கள் கண்களுக்கு தொன்படும் அளவிற்கு கேவலப்படுத்துகின்றார்கள்.
தேர்தலின் பின்னர் என்ன நடக்குமோ என அஞ்சி நிற்கும் மக்களை அரவணைப்பது யார்?
இந்நிலையில் புலம் பெயர் தேசத்திலிருந்து கொண்டு ஸ்ரீலங்காவின் சதிகளை அம்பலப்படுத்த வேண்டிய தேவை உண்டு. அத்துடன் ராஜீவ் காந்தி கொலையுடன் தொடர்புபட்ட மரண தண்டனைக் கைதியின் விடுதலை பற்றி எப்போது சிந்திப்பது?
0 Responses to “அரசியல் சதியில் பலியாக இருக்கும் தமிழினம்”