தமிழ் தேசிய கூட்டமைப்பின் தீர்மானம் ஸ்ரீலங்காவில் தற்போது நிலவும் அராஜக அரசியலுக்கு அவசியமான ஒரு தீர்மானமாக இருந்தாலும் தமிழர்களால் ஏற்க முடியாத ஒன்றே.
ஜனாதிபதி தேர்தலையடுத்து இடம் பெறவுள்ள பொதுத் தேர்தலின் பின் இலங்கை அரசியலி இருந்து தமிழ் தேசிய கூட்டமைப்பை அழிப்பது தான் மகிந்தவின் சிந்தனை, ஆனால் இதற்கிடையில் தலைவர் சம்பந்தன் எடுத்துள்ள தீர்மானம் அல்லது யோசனை புத்திசாலித்தனமானது என்பதை ஏற்றுக் கொள்வதும் கடினம் தான்
எனினும் மக்களின் கருத்து படி ஜனாதிபதி தேர்தலை த.தே.கூட்டமைப்பு எதிர் கொண்டிருந்தால் தற்போது எடுத்துள்ள நிலைப்பாட்டில் மக்கள் ஒரு தெளிவை அடைந்திருப்பர்.
த.தே.கூட்டமைப்பு சரத் பொன்சேகாவிற்கு ஆதரவளிப்பதாக கூறிய இறுதி சர்ந்தப்பத்தில் சிங்கள மக்களிடையே சரத்பொன்சேகாவிற்கான ஆதரவு சரியத் தொடங்கியதாக ஜனாதிபதி தேர்தலை அவதானித்த பத்திரிகையாளர்கள் கருதுகின்றனர். ஆகவே சில நடவடிக்கைகள் அவசியமானது என்பதை நாம் ஏற்க வேண்டியுள்ளது.
வடக்கு கிழக்கு பிரிக்கப்பட்டடுள்ளது, தமிழர்களின் விகிதாசாரமும் வீழ்சியடைந்துள்ளது ,திட்டமிட்ட குழப்பத்தினால் முஸ்லீம்கள் தாம் தமிழர்கள் என கூறுவதை விடுத்து தனி இனமான தம்மை கருதி வருகின்றனர். இப் பாதிப்புக்களை உணர்ந்து ஏற்கனவே (புலிகளும்) செயற்பாட்டில் (தமிழ் பேசும் மக்கள் என்ற சொல்லின் பயன்பாடு அதிகரித்தது) இறங்கிய போதும் சூழ்ச்சிகளினால் தனிமை விரிவடைந்து கொண்டே சென்றது.
இன்றைய அராஜக ஆட்சியில் தமிழ்பேசும் மக்கள் இணைந்து செயற்பட வேண்டியதை உணராமல் இடைஞ்சல்களாக இருப்பது எவ்வளவு முட்டாள்தனம். ஆகவே இவற்றுக்கு முற்றுப்புள்ளி வைப்பதும் அவசியம்.
இந் நடவடிக்கைகளுக்கு தென்னிலங்கையிலும் வெளிநாடுகளிடமும் சிங்களவர்களிடமும் நல்ல அபிப்பிராயம் தேற்றுவிக்கப்பட்டாலும் அந்தளவிற்கு தமிழ் மக்களிடம் வரவேற்கப்படுமா என்பது கேள்விக் குறியே.
இறுதி யுத்த நாட்களில் வன்னியில் இருந்த தமிழ் மக்கள் முற்றும் வெறுப்படைந்த நிலையில் உள்ளனர், அவர்கள் எந்த ஒரு தமிழ் கட்சிகளையும் நம்பும் நிலையில் இல்லை என்பதை தெளிவாக கூறிவருகின்றனர்.
இதற்கிடையே சில வர்த்தகர்கள் த.தே.கூட்டமைப்பின் சார்பில் தேர்தலில் களமிறங்க போட்டியிட்டுக் கொண்டும் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தலைவர் சம்பந்தன் கூறுவது போல் மக்களோடு மக்களாக, உண்மையுள்ளவர்களாக இருக்கும் வேட்பாளர்களை நிறுத்த உள்ளோம் என்று கூறுவது ஏற்க முடியாது. ஏனெனில் குடாநாட்டில் உணவுப் பொருள் பற்றாக் குறை ஏற்பட்ட போது கூட்டமைப்பின் முக்கிய பா.உறுப்பினர் ஒருவர் பலநோக்கு கூட்டுறவு சங்கத்தினரின் திருட்டுகளுக்கும் பதுக்கல்களுக்கும் துணைபோனதை நாம் மறந்துவிடவும் முடியாது.
இது தவிர கூட்டமைப்பின் இன்றைய தள்ளாட்ட நிலைமைக்கு புலம்பெயர் தமிழீழ செயற்பாட்டாளர்களும் பெறுப்பேற்க வேண்டும்.
2009 மே 18ஆம் திகதிக்கு பின்னரான நிலைப்பாட்டை ஒருமித்த கருத்துடன் பொறப்பான முறையில் எடுக்காததுடன் ஒரு ஒழுங்கிற்குள் நிற்கத் தவறியதும் த.தே.கூட்டமைப்பின் பலத்தை இலங்கiயில் சிதறடித்தது என்பதை மறுக்க முடியாது.
மேலும் புலம் பெயர் தமிழீழ செயற்பாட்டாளர்கள் பலரும் தற்போது தமது செயற்பாகளில் இருந்து ஒதுங்கியுள்ளனர். ஸ்ரீலங்கா அரசின் அச்சுறத்தல்கள் புலம்பெயர் நாடுகளில் பெரியளவில் இருக்காத நிலையில் தமது செயற்பாடுகளில் இருந்து விலகியிருக்கும் அல்லது பிரிந்து நிற்கும் இவர்கள், களத்திலிருந்து சவால்களை எதிர் நோக்கும் த.தே.கூட்டமைப்பை அல்லது அங்கிருக்கும் ஒரு தமிழ் பொதுமகனை விமர்சிப்பது எவ்வளவிற்கு நியாயம் என்பதை அவர்களே உணர வேண்டும்.
ஏற்கனவே பல தடவைகளில் கூறியது போல தாயகத்து மக்களின் உணர்வுகளுக்கும் புலம் பெயர் மக்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து செயற்படும் அரசியலே ஸ்ரீலங்காவின் அராஜக அரசியலை முறியடிக்கும்.
0 Responses to “மகிந்தவின் சிந்தனைக்கு ஆப்பு வைப்பது யார்?”