மே 18ம் திகதி 2009 பின் தமிழர்களின் தலைவிதி இது தான் என்றாகிவிட்டது.
குடாநாட்டுக்கு நேரடி போக்குவரத்துகள் வேண்டும் குடாநாட்டு மக்களுக்கு வெளியிடத் தொடர்புகள் வேண்டும் என்ற நீண்ட நாள் எதிர்பார்ப்பு நிறைவேற்றப்பட்டது.
குடா நாட்டில் வாழ்பவர்கள் தமிழர்களாக இருந்தாலும் அங்கு வந்து போவதற்கு மொழியோ, இனமோ, நாடோ என்றிருப்பது அவசியம் இல்லை ஆனால் வந்து போகிறவர்கள் அந்த பகுதி மண்ணில் வாழ்வோரை வாழவிட வேண்டும்.
‘சிறுபான்மையினர் என்று எம் நாட்டில் எவருமில்லை நாம் எல்லோரும் ஒரு நாட்டின் மக்கள்” என்ற மகிந்தவின் கூற்று பாதகமான எதிர்காலத்தை இலங்கையில் வேறுவிதமாக ஏற்படுத்துகின்றது.
குடாநாடு உட்பட வடக்கு கிழக்கு பகுதிகளில் சிங்களவர்களின் வியாபாரம் பெருகியுள்ளமையானது வேறு விதமான எதிர்காலத்தை தோற்றுவிக்கின்றது.
தடுப்பு முகாம்களை அண்டியுள்ள பகுதியில் பல தேனீர் கொட்டகைகள் முளைத்தெழும்பின, உலகம் முழுக்க தெரிந்த ‘மெனிக் பாம்” பகுதியில் உள்ள முகாமிற்கு அருகாமையில் உணவு விடுதி நடத்திவருபவர்கள் அவிசாவளையை சேர்ந்த சிங்களவர்கள்.
தமிழர்களும் தென்பகுதியில் வியாபாரத்தில் ஈடுபடுகிறார்கள் தானே ஏன் சிங்களவர்கள் வியாபாரம் செய்வது தவறோ? என கேட்கலாம்.
ஆனால் இரண்டுக்கும் இடையில் நிறைய வேறுபாடுகள் உள்ளதை அவதானித்தால் புரியும்.
புதிதாக மெனிக் பாமில் ஆரம்பித்த இவ் வியாபாரங்கள் வடக்கு கிழக்கு முழுவதும் பரவி இன்று சுமார் 50 வீதமான உள்ளுர் வியாபாரங்கள் விழுகையடைந்துள்ளன என வடக்கு கிழக்கு வர்த்தகர்களின் கவலைகள் தெரிவிக்கப்டுகின்றது.
இலங்கையில் எதுவுமே ஆதாரமற்ற செயலாகவே உள்ளது, புறச் சூழல் ஆய்வுகளை மேற்கொள்ளாமல் அதிகாரிகள் கண்ணை மூடிக் கொண்டு தமது சட்டைப் பைகளை நிறப்புவதில் அதிக அக்கறையாக இருப்பது இதில் இன்னும் வேதனை தரும் விடயம்.
குடா நாட்டு வர்த்தகர்களுக்காக குரல் கொடுப்பது மகா தவறு அது எனது வாழ்க்கையில் செய்யும் பாரிய குற்றம்,
ஏனெனில் போர்க்காலங்களில் அரசாங்கம் ஏற்படுத்திய பொருளாதாரத்தடையிலும் மோசமான பொருளாதார நெருக்கடியை தந்தவர்கள் வர்த்தக பாவிகள்.
வார்த்தையில் சொல்ல முடியாத கேவலமான வியாபார தந்திரங்களை பின்பற்றி பண முதலைகளான இப்பாவிகளிடம் இருந்து தமிழ் மக்களை மீட்க அன்று யாரும் இருக்கவில்லை.
இறுதி ஈழப் போர் ஆரம்பமான போது குடா நாட்டு மக்கள் பஞ்சத்தின் விழிம்பை எட்டிப்பார்த்தவர்கள். இவ் வர்த்தகர்களுக்கு துணை போனவர்கள் வெளிநாட்டு தமிழ் உறவுகள் என்பதையும் சேர்த்துக் கூறுகின்றேன்.
அன்றைய 2006 போக்குவரத்துகள் நிறுத்திவைக்கப்பட்ட போது அன்று குடாநாட்டில் இருந்த வெளிநாட்டு தமிழ் பிரஜைகளை அரசாங்கம் கப்பல் மூலம் திரிகோணமலைக்கு அழைப்பித்து அவர்களின் பயணத்தை தொடர வழியமைத்துக் கொடுத்தது.
அதன் பின்னர் ஒரேயொரு மார்க்கமாக இருந்த விமான சேவையும் தடைப்பட்டிருந்தது அவசர தேவைகளுக்காக கொழும்பு செல்ல வேண்டியிருந்த அப்பாவி மக்களின் தேவைகள் மீது மண்ணை அள்ளிப் போட்டவர்கள் இந்த வெளிநாட்டு உறவுகள்.
சாதாரணமாக சுமார் 12 ஆயிரம் ரூபா செலவில் பயணம் செய்யும் விமான கட்டணத்தை சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபா செலவில் பறந்து வந்தார்கள் அக் கட்டணத்தை மீட்பதற்கு சிகரட்டையும் மது பானத்தையும் கொண்டுவந்தனர் எம் உறவுகள்(குழந்தைகளுக்கான பால்மாவோ மருந்து வகையோ இல்லாமல் குடாநாட்டு மக்கள் வாடி நின்றனர்), சொல்லவா வேண்டும் யாழ்ப்பானத்து சனத்தை.
சாதாரண கட்டணத்தில் பயணிக்க பகீரத முயற்சியில் இறங்கியிருந்த அப்பாவி மக்களின் முயற்சியின் மீது மண்ணள்ளி போட்டது வெளிநாட்டு பணம், வெளிநாட்டு உதவி பெற்றவர்கள் குறிப்பிட்ட விமானத்தை வாடகைக்கு அமர்த்தி தமது பயணத்தை பெரும் செலவில் செய்தனர். சாதாரன விமான கட்டணம் சுமார் 100 வீதத்தால் அதிகரிப்பதற்கு காரணமானது வெளிநாட்டு பணம்.
இதற்கிடையில் களஞ்சியத்தில் தேவையான பொருட்கள் இருந்த போதும் அதிக இலாபத்தை எதிர்பார்த்திருந்து கேவலமான வியாபாரம் இடம் பெற்று வந்தது.
எனினும் இதற்கு அப்பால் தற்போது வடக்கு கிழக்கில் பரவியுள்ள சிங்கள வியாபாரங்கள் கட்டுப்படுத்த வேண்டியது கட்டாயமே.
உள்ளுர் குக்கிராமங்களிலும் நுளையும் இவ் சி.வியாபாரிகளிடம் இருந்து மக்கள் பொருட்களை பெறுவதினால் வர்த்தக நிலையங்கள் பாதிக்கப்படைகின்றது.
யாழ் பேரூந்துகளில் பொருட்கள் விற்கும் ஆட்களின் எண்ணிக்கையும் அதிகாரித்துள்ளது.
வடக்கு கிழக்கின் தமிழரின் வளங்கள் சுரண்டப்படுகன்றன.
இதற்கிடையே கடந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட பெரும்பான்மை கட்சியை சேர்ந்த சிலர் புலம்பெயர் தமிழர்களிடம் நிதியதவியும் கோரியிருந்தனர்.
அதே போல நடக்க இருக்கும் நாடாளமன்ற தேர்தலுக்கம் நிதியுதவி கேட்டுமுள்ளனர்.
பிச்சைக்காரர் முதல் அரசியல்வாதி வரை தமிழ் மக்களின் வளங்களை சுரண்டுவதை தடுப்பதற்கு சுயநலமற்ற தகுந்த தலைமைகள் எப்போது எமக்க கிடைக்கும்.
அரசியல்வாதியையும், அரசாங்கத்தையும், எதிரியையும் குற்றம்சாட்ட முன். இன்றைய வடக்கு கிழக்கு சமூக சீரழிவிற்கு எம்மக்கள் மத்தியில் தலைவிரித்தாடும் வெளிநாட்டு பணமும் வெளிநாட்டு மோகமும் தான் அதிக காரணம் என்பதை புலம் பெயர் உறவுகளும் உணரவேண்டும்.
0 Responses to “வளம் சுரண்டும் பிச்சைக்காரரும், அரசியல்வாதிகளும் -துணைக்கு புலம்பெயர் தமிழர்களும்”